சென்னையில் ஒரு மழைக்காலம்

இந்த வருட மழை சீசன் ரொம்பவே படுத்திவிட்டது. இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் சென்னை-வேளச்சேரியில் தான் வசித்து வருகிறேன். ஆனால் இந்த வருடம்தான் கன மழை. நிஷா செய்த அட்டகாசம் கொஞ்ச, நஞ்சம் இல்லை. நான் நவம்பர் இருபத்தேழாம் தேதி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது எங்கள் வீட்டை சுற்றி முழங்கால் அளவு தண்ணீர் இருந்தது. நான் தூங்கி எழுந்து மறுநாள் பார்த்தால் இடுப்பளவு தண்ணீர். பாரதி பாட்டை மாற்றி " எங்கெங்கு காணினும் தண்ணியடா" என்று பாடினேன். பிறகு மீண்டும் தூங்கிவிட்டேன்.திடீரென்று வெளியில் "போட்! போட்!" என்று யாரோ கத்தும் சத்தம் கேட்டது.நான் உடனே, "பாரடா இந்த அநியாயத்தை! இந்த மழையில் எவனோ குழந்தைகள் விளையாட போட் பொம்மை விற்றுக் கொண்டிருக்கிறான்" என்று நினைத்து , யார் அந்த மனிதன் என்று எட்டிப் பார்த்தால் பெரிய கட்டுமரம் ஒன்று எங்கள் வீதியில் மிதந்து செல்கிறது. எங்கள் வீட்டு ஓனரைக் கூப்பிட்டு "இது என்ன சார்?" என்றேன். அவர் ரொம்ப நிதானமாக "நாம இப்ப வெளில போக முடியாது சார். ஏன்னா , இந்த தண்ணியில பாம்பு, தேளு எல்லாம் இருக்கும். நீங்க இப்ப வெளில போனும்னா இந்த போட் தான் ஒரே வழி" என்றார். நான் கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்று நினைத்து கொண்டேன். எனது அன்பு மருமகன் கார்த்தி ஆதம்பாக்கத்தில் இருக்கிறான். அவனது சேம, லாபங்களை விசாரிப்போம் என்று அவனுக்கு போன் செய்தால் அவன் அங்கும் இதே கதைதான் என்றான். பிறகு இருவரும் சேர்ந்து "ஆபரேஷன் எஸ்கேப் " என்னும் திட்டத்தை தயார் செய்தோம்.அதன்படி நானும் அவனும் அவரவர் இடத்தில் இருந்து உடனே கிளம்பி அசோக்நகரில் உள்ள எங்களது உறவினர் வீட்டிற்கு செல்வது என்று தீர்மானித்தோம். சரி கிளம்பலாம் என்று வெளியில் வந்தால் நல்ல மழை பிடித்துக் கொண்டது.அதனால் போட் சேவையை உடனே நிறுத்திவிட்டார்கள். பிறகென்ன ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு இடுப்பளவு தண்ணீரில்(நான் ஆறடி உயரம் உள்ளவன்) மெல்ல நடந்து சென்று மெயின் ரோட்டை பிடித்து பிறகு அங்கிருந்து ஒரு வழியாக உறவினர் வீடு சென்று சேர்ந்தோம். கனமழை காரணமாக வேளச்சேரியில் கரண்ட் வேறு நிறுத்திவிட்டார்கள். நவம்பர் இருபத்தி ஏழாம் தேதி போன கரண்ட் மீண்டும் டிசம்பர் ஒன்றாம்தேதி மதியம்தான் வந்தது. இப்படியாக ஒரு பெரிய சாகசத்தை என் வாழ்க்கையில் செய்துமுடித்த திருப்தியில் இருந்தால் திடீரென்று டிவியில் நிசாவின் தங்கை உஷா(ஹி ஹி! இது நான் வைத்த பெயர்) வந்திருப்பதாக சொன்னார்கள். என்னடா இது சென்னைக்கு வந்த சோதனை என்று நான் நொந்து நூடுல்ஸ் ஆகி, வெந்து வெர்மிசில்லி ஆனேன். நல்லவேளை அந்த புயல் சீக்கரமே வலுவிழந்து போனது.

Comments

coolzkarthi said…
"நிஷா நிஷா ஓடி வா
working days ல ஓடி வா
black மேகம் கொண்டு வா
தங்கச்சி உஷாவையும் கூட்டி வா"

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

இமயத்து ஆசான்கள்