ஒருப்படியாக கழிந்த சென்ற வாரம்!!!

சென்ற வாரத்தில் நான் செய்த சில வேலைகள் எனக்கு என மனைவியிடம் நல்ல பெயர் வாங்கித் தந்தன.(உஷ்ஷ்! இப்பவே கண்ண கட்டுதே).
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜூலை பதினைந்து கடைசி தேதி என்று எங்கள் குடியிருப்பின் தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டியிருந்தார்கள். ஆஹா! நமக்கும் ஒரு விடிவு காலம் வந்துவிட்டது. ஒரு உருப்படியான முகவரி சான்று கிடைத்துவிடும் என்று எனக்கு சந்தோசம்.அதற்கான விண்ணப்பங்கள் எங்கள் குடியிருப்பின் காவலாளியிடம் இருப்பதையும் தகவல் பலகை சொல்லியது. குறைந்த விண்ணப்பங்களே இருப்பதால் உங்கள் பிரதிக்கு முந்துங்கள் என்று உப தகவலை குடியிருப்பின் நலச்சங்க தலைவர் பின்குறிப்பாக எழுதியிருந்தார்.அதனால் உடனே காவலாளியை தேடி, ஓடி கண்டுபிடித்தேன். இரண்டு விண்ணப்பங்களை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்ட பிறகு தான் எனக்கு நிம்மதி வந்தது. அவரிடமே அதை பூர்த்தி செய்து எங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது அவர் இரண்டு, மூன்று பேருந்து நிறுத்தங்கள் தள்ளி ஒரு சந்தில் இருக்கும் பள்ளியில் கொடுக்க வேண்டும் என்றார்.
சரிதான்! ரொம்ப சுலபம் என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த வேலை அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது. அந்த விண்ணப்பம் வெகு எளிமையாக இருந்ததை இங்கு சொல்லியே ஆக வேண்டும்.நானும் என மனைவியும் அவற்றை பூர்த்தி செய்து தயாராக வைத்தோம். விண்ணப்பங்களை வாங்கிய அன்றே அலுவலகத்தில் கூகிள் மேப் தளத்தில் அவர்கள் சொன்ன அந்த பள்ளி எங்கிருக்கிறது என்று தேடினேன். அது அந்த பகுதியில் இருக்கும் ஒரு அரசாங்க நடுநிலை பள்ளியை சுட்டியது. தகவல் பலகை நோட்டிசோ அரசாங்க உயர்நிலைப்பள்ளி என்று சொல்லியதால் எனக்கு ஒரே குழப்பம். சரி எதற்கும் கூகுள் மேப் சொல்லும் பள்ளியின் வழியை குறித்து வைப்போம் என்று அதை அப்படியே எனது கணிப்பொறி மூளையில்( ஹி ஹி ! ஒரு விளம்பரம்) ஏற்றி வைத்தேன்.
மறுநாள் எனது மனைவியை அழைத்துக் கொண்டு அந்த பள்ளி இருக்கும் வழியில் சென்றோம். அந்த நடுநிலைப் பள்ளியும் வந்தது. அருகில் இருந்த ஒரு கடைக்காரரிடம் "உயர்நிலைப்பள்ளி எங்கு உள்ளது?" என்று கேட்டால் அந்த மகராசன் ஒரு வழி சொன்னார். அந்த வழியில் சென்றால் பள்ளி இருப்பதற்கான அறியும் இல்லை, குறியும் இல்லை. சரி வேறு யாரையாவது கேட்கலாம் என்று அந்த வழியில் சென்ற ஒரு பெண்மணியை கேட்க அவர் உடனே " இங்க ஹை ஸ்கூல் எதுவும் கெடையாது. இருக்கறது ஒரே ஒரு மிடில் ஸ்கூல் தான்.எதற்கும் நீங்க வேற யாரையாவது கேளுங்க" என்றார். கிழிந்தது கிருஷ்ணகிரி என்று ஒரு டீ கடையில் விசாரித்தால் அவர்கள் ஒரு வழி சொன்னார்கள் . சரி அதையும் முயன்று பார்ப்போம் என்று தொடர்ந்தோம். அது என்னடாவென்றால் கடைசியில் மெயின் ரோட்டில் முடிந்தது. அட ராமா! இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை என்று ஒரே குழப்பம். பிறகு எங்கள் பொதுக் குழுவில்(நானும் எனது மனைவியும்) இதைப் பற்றி விவாதித்து அந்த நடுநிலைப்பள்ளிக்கே செல்வது என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.அங்கு சென்றால் ஏற்கனவே சிலர் கையில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் நின்றிருந்தார்கள். அப்பாடா! ஒரு வழியாக சரியான இடத்தை வந்தடைந்தோம் என்று எங்கள் விண்ணப்பங்களை கொடுத்தோம். அதை பெற்றுக்கொண்ட ஆசிரியை முகவரி ஆதாரமாக நான் எனக்கும் , என் மனைவிக்கும் கொடுத்த எரிவாயு ரசீது எனக்கு மட்டுமே செல்லும் என்றும்,(அது என் பெயரில் இருப்பதால்) என் மனைவி பெயரில் தனியாக ஏதாவது ஒரு இருப்பிட சான்று வேண்டுமென்றும் ஒரு குண்டை தூக்கி போட்டார். இது வேலைக்காகாது என்று நாங்கள் வீடு திரும்பினோம். அன்று எனது மனைவி, அவளது அலுவலத்தில் இருந்து இன்னார் இந்த அலுவலத்தில் பணி செய்கிறார்.இவர் மேற்படி விலாசத்தில் வசிக்கிறார் என்று ஒரு சான்றிதழ் வாங்கி வந்தாள். மறுநாள் மீண்டும் அந்த பள்ளி சென்று அதைக் கொடுத்தால் , அந்த ஆசிரியை (இவர் வேறொருவர்) ."இந்த மாதிரி செர்டிபிகட் எல்லாம் எலெக்சன் ஆபீசில் ஒப்புக்க மாட்டாங்க சார்! வேற எதாவது ப்ரூப் கொடுங்க" என்றார். நான் முதல் நாள் சென்றதையும், நடந்ததையும் சொல்லியும் அவர் கேட்கவில்லை. பிறகு எனது பெயரில் உள்ள எரிவாயு ரசிதே போதும் என்றார்.அதனால் அதையே கொடுத்துவிட்டு , இரண்டு விண்ணப்பங்களை அவர் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
இத்துடன் எனது சாதனை முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. அன்று இரவே தகவல் பலகையில் ஒரு புதிய நோட்டீஸ் பல்லிளித்தது. என்ன விஷயம் என்று நான் ஆர்வமாய் பார்த்தால் அது மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றியது. மறுநாள் (ஜூலை பதினாறு) எங்கள் குடியிருப்பிற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் வருவார்கள் என்பது செய்தி. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, வழக்கமாய் நடக்கும் மொக்கை விஷயம் கிடையாது என்றும், இந்த முறை அரசாங்கம் இதை அடிப்படையாக வைத்து பொது மக்களுக்கு அடையாள அட்டை தரப் போகிறது. எதிர்காலத்தில் அந்த அட்டை மிகவும் முக்கியம் என்று ஏற்கனவே எனது அம்மா ஊரிலிருந்து தொலைபேசி செய்து எனக்கு சொல்லியிருந்தார். அதனால் அதை விட்டுவிடக் கூடாது என்ற முடிவிற்கு வந்தேன். பிரச்னை என்னவென்றால் நாங்கள்( நானும் எனது மனைவியும்) இருவரும் அலுவலகம் செல்பவர்கள். அதனால் யாராவது ஒருவர் விடுப்பு எடுத்து வீட்டில் இருக்க வேண்டும். நான் எனது மேலாளரிடம் நிலைமையை சொல்லி விடுப்பு எடுப்பதாக தொலைபேசியில் சொல்ல அவரும் உடனே ஒப்புக் கொண்டார்.பிறகென்ன ? மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் வந்தார்கள், நான் எங்களுடைய விவரங்களை சொல்ல குறித்துக் கொண்டார்கள், ஒப்புகை சீட்டு கொடுத்து அடுத்த வருடம் புகைப்படம் எடுப்பதாக சொல்லிச் சென்றார்கள். அந்த வேலை இனிதே முடிந்தது.
அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த என் மனைவி சொன்னாள் " உங்க வாழ்க்கைலயே நீங்க ஒருப்படியா செஞ்ச வேல இதுதான்" . நான் ஜென்ம சாபல்யம் அடைந்தேன்.

Comments

Unknown said…
Veetula madurai Aatchi!!!

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

இமயத்து ஆசான்கள்