கொரோனாவும் சிராகிகசுவும்!

         அதாகப்பட்டது மஹாஜனங்களே !  இந்த கொரோனா அட்டகாசத்தின் நடுவே நாம் ஒரு அட்டகாசமான(?) கதையை பார்ப்போம்.
          நம்ம கதையின் நாயகன் சிவராமக்ரிஷ்ணகணபதிசுப்ரமணியன்.சுருக்கமாக  சிராகிகசு.நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு சிவா.ஐடி  நிறுவனத்தில் பணி . கொரோனா ஆட்டம் தொடங்கியதும்  அவனது மேலாளர் மன்னார்குடி மாத்ருபூதம் அழைத்தார் .அவர்களுக்கு இடையே நடந்த சம்பாஷணை இதோ.
மேலாளர் ம.மா: மிஸ்டர் சிவா! நான் உன்னை  எதற்கு அழைத்தேன் என்றால் ...
சிவா : சார் , அந்த பொண்ணு லல்லி சொல்வது எல்லாம் பொய் .நான் அவகிட்ட ப்ரொபோஸ் எல்லாம் செய்யல. வாங்க லல்லி, கேன்டீன்ல காபி குடிக்க போலாம்னு தான் சொன்னேன்
மேலாளர் ம.மா: இந்த கருமம் வேறயா? நான் உன்னை அதுக்கு கூப்பிடல. கொரோனா பரவரதால எல்லாரையும்  work from home  செய்ய சொல்றாங்க.நீ நாளைலருந்து ஆபீஸ் வராதே .வீட்ல இருந்து வேல பாரு
சிவா: சார் என்னால வீட்ல இருந்து வேல செய்ய முடியாது, ரொம்ப கஷ்டம்
மேலாளர் ம.மா: ஆமா, நீ ஆபீஸ் வந்தா மட்டும்  வேல செஞ்சு கிழிச்சிடுவ . சொன்னத செய்.அதுமட்டுமில்ல சிவா, அந்த லல்லி உனக்கு அக்கா மாதிரி, என்னை உன் மாமாவா நெனச்சுக்கோ, புரியுதா ?

சிவா: (மனதிற்குள்) கிழிஞ்சது கிருஷ்ணகிரி…
அதன் பிறகு நம்ம சிவா மூஞ்சிய சோகமா வச்சுக்கிட்டு லல்லியை ஒரு ஓரப்பார்வை பார்த்திட்டு உடனே கேன்டீனுக்கு போய் ரெண்டு பஜ்ஜி ஒரு காப்பி குடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.
          வீட்ல அவன் அம்மா பங்கஜம், குண்டுமல்லி சீரியலோட 2035 வது எபிஸோட பார்த்துகிட்டு இருந்தாங்க.சிவா வர்றத பார்த்து அவங்களுக்கு ஆச்சரியம். "இந்த தடிமாடு ஆபீஸ் விட்டு வர தினமும் 8 மணி ஆகிடும், இன்னைக்கு என்ன 5 மணிக்கு வருது." என்று மைண்ட் வாய்ஸில் பேசிவிட்டு, "கண்ணு சிவா! என்ன சாமி இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் வந்திட்ட?" என்று அன்பொழுக கேட்டாங்க.சிவாவும் ரொம்ப சலிச்சிக்கிட்டு , "அம்மா, இந்த வைரஸ் வேகமா பரவுதாம், அதுனால நாளைல இருந்து என்ன வீட்ல இருந்து வேல பாக்க சொல்லிட்டாங்க" என்றான் . பங்கஜத்துக்கு தூக்கி வாரி போட்டது."இந்த பய சனி ஞாயிறு வீட்ல இருந்தாலே நம்மள டிவி பார்க்க விடமாட்டான்.இதுல தினமும் வீட்ல இருந்தா  நாம எப்படி குண்டுமல்லி, பெரியப்பா,தாலிக்கு வேலி ,புயல் , இல்லம் ஒரு வெல்லம் சீரியல் எல்லாம் பாக்குறது?" என்று அவங்களுக்கு கவலை .சரி, நடக்கறது நடக்கட்டும் அப்டின்னு விட்டுட்டாங்க.
         நம்ம சிவா வீட்ல உட்காந்து எல்லா நியூஸ் சேனலையும் மாத்தி மாத்தி பார்த்தான்.எல்லாத்துலயும் கொரோனா கொரோனானு வைரஸ்  புராணம் தான்.எவ்ளோ நேரம் நியூஸ் பார்த்தான்னு தெரியல.திடீர்னு சிவாக்கு  ஒரு யோசன வந்திச்சு.நாம ஏன் இந்த வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க கூடாதுன்னு.
உடனே லேப்டாப் ஆன்  செஞ்சு அந்த வைரஸ் பத்தி நிறைய படிச்சான்.அவனுக்கு ஒரு தெளிவு கிடைச்சது.வீட்ல இருக்குற இஞ்சி, மிளகா,பழைய  பேஸ்டு, கோலமாவு, போன தீபாவளிக்கு அவங்க அம்மா செஞ்ச அதிரசம்  அப்படி, இப்படின்னு நெறய அபூர்வ பொருட்கள் போட்டு ஒரு மருந்து ரெடி பண்ணான். அது 90% வேல செஞ்சது ஆனா 10% இடிச்சது. இன்னும் என்ன செய்லாம்னு யோசிச்சு  ஐநா சபைக்கு விஷயத்தை சொன்னான். அவன் ஆர்வத்தையும் கண்டுபிடிப்பையும் பார்த்த  அவங்க ஆடி போய்ட்டாங்க , அசந்து போய்ட்டாங்க. உடனே அவன்கூட ஒரு பெரிய விஞ்ஞானிகள்  குழுவை கோர்த்து விட்டாங்க . அதுல ஒருத்தர் தான் நம்ம பகோடா நாடு விஞ்ஞானி ஜிம்பல்லக்கடி பம்பா, சுருக்கமா ஜிபா(ஜிப்பா இல்ல).
             அவரு பேசுறது நம்ம பயலுக்கு புரியல, இவன் பேசுறது அவருக்கு புரியல. "நீ என்ன கருமத்தை பண்ணி வச்சுருக்கனு"  அவரு, அவர் மொழியில கேட்க, நம்ம சிவா இந்தாளு நம்ம முழுப்பேர கேட்கறான் போலன்னு நெனச்சுக்கிட்டு, " மிஸ்டர் ஜிபா , என் பேரு சிவராமக்ரிஷ்ணகணபதிசுப்ரமணியன். சுருக்கமா சிராகிகசு" அப்டின்னு சொன்னான். உடனே ஜிபா முகத்துல ஒரு வெளிச்சம்.அவங்க நாட்டு மொழியில சிராகிகசு அப்டின்னா கெட்டுப்போன உப்புமானு அர்த்தம். அத தான் அவன் கேட்கறான்போலன்னு உடனே அவர் வீட்டம்மா கிட்ட பேசுனார்.அந்தம்மா செய்ற உப்மா எப்பவுமே கெட்டுப்போன மாதிரி டேஸ்ட்டுல தான் இருக்கும்.அந்தம்மா ஏதும் புரியாம திடீர்னு வீட்டுக்காரர் கேட்குறாரேன்னு ஒரு சட்டி நெறய கிண்டி கொடுத்தாங்க.அத வாங்கி அவர் சிவாகிட்ட கொடுத்தார். அது பார்க்கவே கொழகொழன்னு கொடுமையா இருக்கவும் சிவா இது எதோ பகோடா நாட்டு மூலிகை கலவைனு நினச்சு தன்னோட மருந்தோட அத கலந்தான். உடனே பழைய தமிழ் சினிமால பாட்டு சீன்ல கலர் கலரா வெடி வெடிக்குமே, அந்த மாதிரி கலர்  கலரா புகை வந்திச்சு. ஒருவழியா அந்த புகை ஓஞ்சதும் , அந்த மருந்த எடுத்து டெஸ்ட் செஞ்சாங்க. நல்லா இருக்கற உப்மாவே கொடும, இதில கெட்டுப்போன உப்மா எப்படி இருக்கும்?  வைரஸ்  கொரோனா , "நான் மானஸ்தன் , இனி ஜென்மத்துக்கும் இந்த பூமிக்கு வர மாட்டேன் . இது என் சித்தப்பன் சார்ஸ்,பெரியப்பன் மெர்ஸ் , கொழுந்தியா பன்றிக்காய்ச்சல் மேல சத்தியம்னு" சொல்லிட்டு காணாம போய்டுச்சு.
      பிறகென்ன? நம்ம சிவாவுக்கு ஒரே பாராட்டு மழை தான்.அவன் சேவைய பாராட்டி , மருத்துவ நோபல் பரிசு கொடுத்தாங்க, அத வாங்க அவன் மேடை ஏறும்போது ......
      பளீர்னு அவன் முகத்துல யாரோ தண்ணி ஊத்துனாங்க. திடுக்கிட்டு  பார்த்தா , நம்ம பங்கஜம்."ஏன்டா பக்கி, விடிய விடிய டிவி பார்த்துட்டு அப்டியே தூங்கிட்டியா? ஓடி போய்  பால் பாக்கெட் தீர்ந்து போறதுக்குள்ள வாங்கிட்டுவா"  அப்படின்னு வசவு வேற .
    பாவம் இல்ல நம்ம சிராகிகசு. நீங்களாவது அந்த லல்லி கிட்ட சொல்லுங்க , சிவா ரொம்ப நல்ல பையன்னு!

Comments

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

இமயத்து ஆசான்கள்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!