நான் வாக்கிங் போறேன் ! நான் வாக்கிங் போறேன்

" ஆளபாரு! தொந்தியும் தொப்பையுமா!  வயித்து சைஸ குறைங்க!" - இது என் சகதர்மினி அடிக்கடி என்னை பார்த்து உதிர்க்கும் நல்வார்த்தை(?)
                     இது போதாதென்று குதிகால் வலி தாங்க முடியவில்லையென்று எலும்புசிகிச்சை நிபுணரை சென்று பார்த்தேன்.அவர் காலை இங்கும் அங்கும் அமுக்கி பார்த்துவிட்டு(எனக்கு மார்க்கெட்டில் தக்காளி வாங்கும் ஞாபகம்  வந்தது), "சார்! இந்த மாத்திரை எல்லாம் சாப்பிடுங்க! நல்லா கேட்கும், ஆனா மாத்திரை சாப்பிடறது நிறுத்தன உடனே வலி வந்திடும்" என்றார்.இது என்ன கொடுமை என்று  நான் கேட்க ,"ஆமா சார் ! நீங்க கொஞ்சம் ஓவர் வெயிட், அத குறைங்க, வலி சுத்தமா நின்னுடும்" என்று திருவாய்மலர்ந்து அருளினார்.
                      சரி, இனி கொஞ்சம் உணவு கட்டுப்பாடு அவசியம் என்று வழக்கமாய் மாலைநேரங்களில் அலுவலகத்துக்கு வெளியே கடையில் பஜ்ஜி போண்டா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வெறும் இஞ்சி டீ மட்டும் குடிக்க ஆரம்பித்தேன்.சில நேரங்களில் டீயில் இஞ்சி ஜாஸ்தி ஆகி , அதை குடிக்கும் என் முகம் இஞ்சி தின்ற மங்கி போல் ஆகிவிடும்.
                       இது ஒருபுறம் இருக்க , எனது  அருமை நண்பர் பாலாஜி , "ரத்த  பரிசோதனை செய்யுங்கள்.வருடம் ஒருமுறையாவது செய்ய வேண்டும்.அப்ப தான் , ரத்த அழுத்தம் , சர்க்கரை எதாவது இருந்தா தெரியும்" என்று ஒரு குண்டு வீசினார்.அதுவும் சரிதான், காலம் கெட்டு கெடக்கு, இப்பல்லாம் சின்ன வயசுலயே கண்ட வியாதியும் வருது, நாம வேற பச்சை மண்ணு , எதுக்கும் பார்ப்போம் என்று அதையும் எடுத்து பார்த்தேன்.என்னுடைய சிற்றறிவுக்கு அந்த ரிப்போர்ட் ஒன்றும் புரியவில்லை.அதனால் , குடும்ப டாக்டரிடம் கொண்டு கொடுத்து , பலன் சொல்ல போகும் ஜோஸ்யக்காரரை ஆவலாய் பார்க்கும் மனிதன் போல  அவர்  வாயை பார்த்தேன்.ஒவ்வொரு  பக்கமாய் புரட்டி பார்த்துவிட்டு கடைசியில் அவர் , "எல்லாம் நார்மல், ஆனா கொலஸ்ட்ரால் பார்டர்ல இருக்கு. டெய்லி வாக்கிங் போங்க" என்று சொல்லிவிட்டார்.இதை வீட்டில் வந்து சொன்னபோது அப்படியா என்று கேட்டுக்கொண்ட என் மனைவி , அவளுடைய அப்பாவிடம் பேசும் போது, "டாக்டரை பார்த்துட்டாருபா ! ஒன்னும் இல்லையாம், கொஞ்சம் கொழுப்பு கூடி போச்சாம், அதுக்காக தினமும் நடக்க சொல்லிட்டாராம்" என்று எக்ஸ்ட்ரா பிட்டை போட்டாள்.ஹ்ம்ம் , என்ன செய்வது எல்லாம் நம்ம நேரம் என்று இப்போது தினமும் அலுவலகம் முடிந்து வந்த உடன் சிறிது தூரம் நடை பயிற்சி செய்கிறேன்.
                      நாம ஸ்டீல் பாடி தான் ! இருந்தாலும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வேறொன்றுமில்லை.

Comments

Suresh said…
You became Lord Nataraja

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

இமயத்து ஆசான்கள்